வழிபாடு
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

Published On 2021-12-20 02:27 GMT   |   Update On 2021-12-20 02:27 GMT
ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய ஸ்தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது. நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது.

ஏனெனில் அன்றைய தினங்களில் மூலவரான நடராஜ பெருமானே நேரடியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வேறு எந்த கோவில்களிலும் காணக்கிடைக்காத அரிய நிகழ்வாகும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சாமி வீதிஉலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டத்தை நேற்று நடத்துவதற்கான ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர். ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நடராஜர் கோவில் தேரோட்டம் நடத்தவும், ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்கள் பங்கேற்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்திற்கு பிறகே தேரோட்டம் நடத்தவும், ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளித்தும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், சிறப்பு அலங்காரங்கள் செய்து, பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சாமிகள் காலை 7 மணி அளவில் கீழ வீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தனித்தனி தேரில் எழுந்தருளினர்.

இதையடுத்து அங்கு திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவ, சிவா, நடராஜா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். முதலில் விநாயகர் தேர், 2-வதாக சுப்பிரமணியர் தேர், 3-வதாக நடராஜர் தேர், 4-வதாக சிவகாம சுந்தரி அம்பாள் தேர், 5-வதாக சண்டிகேஸ்வரர் தேர் என 5 தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. பக்தர்கள் வெள்ளத்தில் 4 வீதிகளில் ஆடி, அசைந்து வந்த தேர்களை கண்டு ஏராளமானோர் கண்டு மனமுறுகி வேண்டினர்.

தேரோட்டத்தை முன்னிட்டு 4 வீதிகளிலும் பெண்கள் கோலமிட்டு தேர்களை வரவேற்றனர். சிவனடியார்கள் மேளதாளங்கள் முழங்கவும், பல்வேறு இசை வாத்திய கருவிகளை இசைத்தபடி பக்தி கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

சில பக்தர்கள் சிவன், பார்வதி, அம்மன் வேடம் அணிந்து காளி ஆட்டம் ஆடி வரவேற்றனர். இ்தற்கிடையில் தேர் மதியம் 1 மணி அளவில் கஞ்சி தொட்டி முனை அருகில் நிறுத்தப்பட்டது.

பின்னர் மதியம் 3 மணி அளவில், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மீனவர் சமுதாயத்தினர் சார்பில் சிறப்பு மண்டகப்படி நடந்தது. அதன்பிறகு நடராஜருக்கு தீபாராதனை முடிந்து, தேர் புறப்பட்டு இரவு 8 மணி அளவில் நிலைக்கு வந்தது.

தேரோட்டம் முடிந்த பின் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சாமிகள் இறக்கப்பட்டு, கோவிலுக்குள் ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு இரவு 8.30 மணி முதல் விடிய, விடிய லட்சார்ச்சனை நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 2 மணி முதல் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது.

காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடக்கிறது. தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலா வந்த பிறகு, மாலை 3 மணி அளவில் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு ஆருத்ரா தரிசன விழா நடைபெறும்.

அதாவது ஆயிரங்கால் மண்டபம் முன்பு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் 3 முறை முன்னும், பின்னும் ஆடி பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்கள். இதையே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
Tags:    

Similar News