செய்திகள்
7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை - கவர்னர் பதில்
7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை என தமிழக கவர்னர் புரோகித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை:
மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக உடனடியாக அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இதனால், மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், உள் ஒதுக்கீடு தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக கவர்னர் புரோகித்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலினின் கடிதத்திற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள பதில் கடிதத்தில் கூறிப்பிட்டதாவது:-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்து நிலைகளிலும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இடஒதுக்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்க 3 முதல் 4 வாரம் கால அவகாசம் தேவைப்படுகிறது.
இதே பதிலைத்தான் என்னை முன்னதாக சந்தித்த அமைச்சரிகளிடமும் கூறியுள்ளேன்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.