செய்திகள்
கோப்புப்படம்

குரும்பூர் கூட்டுறவு வங்கியில் மேலும் பல கோடி ரூபாய் மோசடி?- அதிகாரிகள் தீவிர விசாரணை

Published On 2021-09-22 04:23 GMT   |   Update On 2021-09-22 04:23 GMT
குரும்பூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை டெபாசிட் பணத்துக்கு போலியான பாண்ட் கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குரும்பூர்:

கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை தொடர்ந்து வங்கி வாரியாக அடமானமாக வைக்கப்பட்ட நகைகளின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஆய்வு செய்த போது பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் மற்றும் சார் பதிவாளர்கள் அடங்கிய குழுவினர் மீண்டும் விசாரணை செய்தனர்.

அப்போது வங்கியில் நகை கடனாக பெறப்பட்ட 548 நகை பொட்டலங்களில் ரூ. 2 கோடியே 3 லட்சத்து 98 ஆயிரத்து 700 மதிப்பிலான 261 நகை பொட்டலங்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வங்கியின் தலைவர் முருகேசப் பாண்டியன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கூட்டுறவு சார்பதிவாளர் ஆழ்வார்குமார், செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் ஜான்சி ஆகியோர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அதிகாரிகள் நேற்றும் விசாரணை நடத்தினர்.



அப்போது வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை மோசடி செய்துவிட்டு அதற்கு போலியாக ஒரு டெபாசிட் ‘பாண்டை’ வாடிக்கையாளர்ளிடம் கொடுத்துள்ளது தெரியவந்தது.

அந்தவகையில் இதுவரை பல கோடிக்கு மேல் மோசடியில் நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தினமும் வாடிக்கையாளர்கள் போலி டெபாசிட் பாண்டுடன் வங்கிக்கு வந்து புகார் மனு கொடுத்து வருகின்றனர்.

நேற்று மட்டும் ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் வெளியூர்களில் இருக்கும் சிலரும் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்துள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை டெபாசிட் பணத்துக்கு போலியான பாண்ட் கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் மற்றும் சார் பதிவாளர்கள் அடங்கிய குழுவினர் இன்று 3-வது நாளாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து விசாரணை குழுவினரிடம் கேட்டபோது வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து புகார் மனுக்களை பெற்று வருகிறோம்.

வங்கியில் உள்ள ஊழியர்களிடமும் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மோசடியில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தால் அவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

Similar News