சித்தூர் அருகே காதல் ஜோடி ஏரியில் குதித்து தற்கொலை
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த குப்பம் மங்க மங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 28). கரஹல்லியை சேர்ந்தவர் ரூபா குமாரி (27). இருவரும் கல்லூரியில் படிக்கும் போதில் இருந்து காதலித்து வந்தனர்.
இருவரின் காதல் விவகாரம் ரூபா குமாரியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட காதல் ஜோடி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினர். நேற்று மாலை குப்பம் அருகே உள்ள மோகிலி பேலி ஏரியில் குதித்தனர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் குப்பம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வந்து ஏரியில் குதித்த காதல் ஜோடியை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு காதல் ஜோடி இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ஏரியில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.